உள்ளூர் செய்திகள்

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை படத்தில் காணலாம்.

வத்தலக்குண்டு யூனியன் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

Published On 2022-06-30 07:37 GMT   |   Update On 2022-06-30 07:37 GMT
  • 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் முறையாக பணிகள் வழங்கப்படாததால் யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
  • மேலும் சாலை மறியலுக்கும் முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு யூனியனுக்குட்பட்ட கணவாய்பட்டி ஊராட்சியில் கணவாய்பட்டி, ஆசிரமகாலனி, காந்திநகர், காமராஜர்புரம் ஆகிய 4 கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் முறையாக பணிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பணிகள் ஒதுக்குவதில் பிரச்சிைன ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு மாதத்திற்கு ஒரு வாரம் மட்டுமே பணிகள் ஒதுக்கி வந்துள்ளனர்.

மிகவும் வறண்ட கிராமங்களான இப்பகுதியில் 100 நாள் வேலைதிட்ட பணி கிடைக்காததால் பெண்கள் மிகவும் கவலையில் இருந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டும் முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் அவர்கள் இன்று வத்தலக்குண்டு யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதும் தங்களுக்கு பணி ஒதுக்குவது குறித்து உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். இல்லையெனில் சாலை மறியலில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர். முன்னதாக இன்று காலையில் எழுவனம்பட்டி, கோம்பைபட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்களும் தங்களுக்கு 100 நாள் வேலைதிட்டத்தில் பயனாளிகளின் பெயர் விடுபட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கட்டகாமன்பட்டி பகுதி கிராம மக்களும் போராட்டத்திற்கு முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது.

Tags:    

Similar News