புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கம்
- பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
- காரைக்கால் மார்க்கத்திலிருந்து நிரவி, சேஷமுலை, இடையாத்தாங்குடி, பண்டாரவாடை, திருப்பட்டினம் வழியாக காரைக்கால் சென்றடைகிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் உள்ள புதிய வழித்தடத்தில் புதுச்சேரி போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பஸ் இயக்கப்பட்டது.இதற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மார்க்கத்தில் இருந்து நிரவி, சேஷமுலை, இடையாத்தாங்குடி, பண்டாரவாடை, திருமருகல், திட்டச்சேரி, திருப்பட்டினம் வழியாக காரைக்கால் சென்றடைகிறது.இந்த புதிய வழித்தடத்தை காரைக்கால் மாவட்டம் விழுதியூரில் புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, நிரவி சட்டமன்ற உறுப்பினர் நாகதியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சேஷமுலை, இடையாத்தாங்குடி, திருமருகல், திட்டச்சேரி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு பஸ்சை வரவேற்றனர். இடையாத்தாங்குடியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்திரகலா கிருஷ்ணமூர்த்தி, முருகன், சிவகாமிஅன்பழகன், இடையாத்தங்குடி சுப்பிரமணியன், சேஷமூலை திருநாவுக்கரசு, விழுதியூர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
திட்டச்சேரி பஸ் நிலையம் அருகில் பேரூர் திமுக செயலாளர் முகமது சுல்தான் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய வழித்தடத்தில் இயக்கிய பஸ்சை வரவேற்றனர்.
இதில் புதுச்சேரி மாநில போக்குவரத்து கழகத்தின் காரைக்கால் கிளை மேலாளர் அருள்ஜோதி, திருமருகல் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் இந்திரா அருள்மணி, பெரியமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.