கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் இன்று மாலை சொர்க்கவாசல் திறப்பு
- வைகுண்ட ஏகாதசி தினமான இன்று அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாதம், கோ பூஜையை தொடர்ந்து 10 மணி வரை சுவாமி சயன சேவை நடைபெற்றது.
- 12-ந் தேதி ஆண்டாள் திருக்கல்யாணத்துடன் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி இன்று மாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 23-ந் தேதி முதல் வருகிற 12-ந் தேதி வரை 21 நாட்கள் தினந்தோறும் அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை சுப்ரபாதம், கும்ப ஜபம், மா பொடி, மஞ்சள் பொடி, பால், தயிர்,தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனத்தால் அபிஷேகமும், மாலை 6 மணிக்கு சகஸ்ர நாம பாராயணம், ஆண்டாள் பாசுரம்,கோதா பிரபந்தம், சதுர்வேத பாராயணம் மற்றும் கீர்த்தனாவளி ஆகியன நடைபெற்று வருகிறது.
வைகுண்ட ஏகாதசி தினமான இன்று அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாதம், கோ பூஜையை தொடர்ந்து 10 மணி வரை சுவாமி சயன சேவை நடைபெற்றது. பகல் 11 மணிக்கு விசேஷ திருமஞ்சனம் கும்பாபிஷேகம், தீபாரதனை நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு, சுவாமி வீதி உலா, வேத பாராயணம், பஜனை கோலாட்டம், கும்மி ஆகியன நடைபெறுகிறது. 12-ந் தேதி ஆண்டாள் திருக்கல்யாணத்துடன் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.