கோவையில் டீக்கடையில் கஞ்சா சாக்லெட் பதுக்கி விற்ற வடமாநில வாலிபர் கைது
- 4 கிலோ பாக்கெட்டுகள் பறிமுதல்
- சொந்த ஊரில் வாங்கி வந்து பதுக்கி வைத்து விற்றது அம்பலம்
கோவை,
கோவை கோவில்பாளையம் அண்ணாநகரில் உள்ள டீக்கடையில் கஞ்சா சாக்லெட்டை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து கோவில்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் குருசந்திரவடிவேல் தலைமையிலான போலீசார் தகவல் வந்த கடைக்கு சென்று சோதனை செய்தனர்.
சோதனையில் அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 4 கிலோ கஞ்சா சாக்லெட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் பிஸ்வால் (வயது 36) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கஞ்சா சாக்லெட் எப்படி வந்தது என விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராஜேஷ் பிஸ்வால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்றார். அங்கு இருந்து வரும் போது 6 கிலோ கஞ்சா சாக்லெட்டை வாங்கி வந்தது வட மாநில தொழிலாளர்களுக்கு 2 கிலோ சாக்லெட்டை விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட ராஜேஷ் பிஸ்வாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.