நாகையில் தொடர் மழையால் 2000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின - விவசாயிகள் வேதனை
- தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது.
- வடிகால் கால்வாய் தூர்வாரப்படாததாலும் ஆகாய தாமரைகள் அகற்றப்படாததாலும் பயிர்களை சூழ்ந்த தண்ணீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை முடிவடையும் நிலையில் உள்ளது. இருந்தாலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையில் கரையை கடந்தது.
இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நாகை, திருவாரூர் உள்ளிடட டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டியது.
இந்த சூழ்நிலையில் நாகை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் திருப்பூண்டி, கீழப்பிடாகை, காரப்பிடாகை, மகிழி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டு நடவு செய்து ஒரு வாரமே ஆன 2000 ஏக்கர் இளம் சம்பா, தாளடி நெற்பயிர்களை மழைநீர் மூழ்கடித்தது. மேலும் வடிகால் கால்வாய் தூர்வாரப்படாததாலும் ஆகாய தாமரைகள் அகற்றப்படாததாலும் பயிர்களை சூழ்ந்த தண்ணீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தொடர்ந்து சில நாட்களாக பயிர்கள் மூழ்கிய நிலையில் உள்ளதால் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக வடிகால் வாய்க்காலை தூர்வாரி தேங்கிய தண்ணீரை வெளியேற்றி பயிர்களை காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.