ராஜா எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய காட்சி.
சங்கரன்கோவில் நகராட்சியில் புதிய குடிநீர் பைப்புகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்- ராஜா எம்.எல்.ஏ., அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
- குடிநீர் முறையாக வரவில்லை என பொதுமக்கள் ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
- பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் தினமும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய பைப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று முடியும் நிலையில் உள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் அந்த பணிகளை மெதுவாக செய்து வருவதால் தங்களுக்கு குடிநீர் முறையாக வரவில்லை என பொதுமக்கள் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை அழைத்து ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
அப்போது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து நகராட்சி அதிகாரிகள் மீதமுள்ள புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், இந்த பணிகள் வரும் ஜூலை 10-ந் தேதிக்குள் முடிக்கும் வகையில் அதிக பணியாளர்களை பணியில் அமர்த்தி போர்க்கால அடிப்படையில் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.
மேலும் இந்த பணிகள் தொடர்பாக ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும், இது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. கூறினார்.
ஆலோசனையின் போது, சங்கரன்கோவில் நகராட்சி கமிஷனர் சபாநாயகம், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் பிரியதர்ஷினி, சங்க ரன்கோவில் நகராட்சி என்ஜினீயர் பொறுப்பு சணல்குமார், மேற்பார்வையாளர் கோமதிநாயகம், நகராட்சி கவுன்சிலர் புனிதா மற்றும் நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.