சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் வாக்குவாதம்- பதட்டம்
- சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பதட்டம் நிலவியது.
- முப்பூசை விழாவையொட்டி இரவு சுவாமி வீதியுலாவை விமர்சையாக நடத்த ஏற்பாடுகள் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பிரிவிடையாம்பட்டு கிராமத்தில் பெரியாயி கோவில் உள்ளது. அதே கிராமத்தில் வசிக்கும் ஒரு தரப்பினர் இந்த கோவிலில் முப்பூசை விழாவையொட்டி இரவு சுவாமி வீதியுலாவை விமர்சையாக நடத்த ஏற்பாடுகள் செய்தனர். ஏற்கனவே சுவாமி வழிபாடு தொடர்பாக பிரச்னை இருந்ததால், கடந்த ஒரு மாதத்திற்கு முன் சங்கராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான பேச்சு வார்த்தை நடந்தது. அதில், வழக்கத்திற்கு மாறாக எந்த நிகழ்ச்சிகளும் நடத்த கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக சுவாமி வீதியுலா நடைபெறுவதாக கூறி, அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தகவலறிந்த திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பழனி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார், பிரிவிடையாம்பட்டு கிராமத்திற்கு சென்று இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நள்ளிரவு 12.30 மணியளவில் சுவாமி வீதியுலா ரத்து செய்யப்பட்டது. இதில், மாரியம்மன் கோவிலில் நேற்று நடைபெற இருந்த சாகை வார்த்தல் நிகழ்ச்சியையும் ரத்து செய்ய வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தினர். தொடர்ந்து, ரிஷிவந்தியம் வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் இரு தரப்பினர் முன்னிலையில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி இந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு காணலாம் என கூறினார்.இதையொட்டி நள்ளிரவு 1 மணியளவில் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், பிரிவிடையாம்பட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.