Census: தமிழ்நாட்டில் ஜூலை 17 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி
- மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளன.
- 33 கேள்விகளுக்கு மக்களிடம் இருந்து பதில்கள் பெறப்படும்.
கடந்த 2021-ல் நடத்தப்பட்டிருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக தள்ளிபோனது. இந்நிலையில் மக்கள் தொகை 2027-க்கான பணிகள் ஏப்ரல் 1 முதல் தொடங்க உள்ளன.
இந்த பணிகளை 2 கட்டங்களாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ஏப்ரலில் தொடங்கி செப்டம்பர் வரையில் வீடுகளின் பட்டியல் மற்றம் வீடுகளின் எண்ணிக்கை ஆகியவை கணக்கெடுக்கப்படும்.
இதில் 33 கேள்விகளுக்கு மக்களிடம் இருந்து பதில்கள் பெறப்படும். இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் 2-ம் கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளன. இதில், 32 லட்சம் அரசு அலுவலர்கள் நாடு முழுவதும் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 17-ந்தேதி தொடங்கும் என தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 17 தொடங்கி ஆகஸ்ட் 30-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
45 நாட்கள் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீட்டின் நிலை, வசதிகள், சொத்துக்கள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 33 கேள்விகள் இடம் பெறும்.