மத்திகிரி அருகே வாடிக்கையாளரை மோசடி செய்ததாக நிறுவனம் முற்றுகை- பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார்
- 20 நாட்களுக்கு பிறகு டெலிவரி வழங்கப்பட்ட போது ஆர்டரில் 60 சதவீத பொருட்கள் மட்டுமே இருந்துள்ளது.
- பழனிவேல் 25 நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் ரூபிங் ஷீட் கடை நடத்தி வருபவர் பழனிவேல் (வயது 45). இவர் ஒசூர் அருகே கலுகொண்டப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் ரூபிங் ஷீட் தயாரிப்பு நிறுவனத்தில், ரூபிங் ஷீட் பெற 8,80,000 ரூபாய் பணம் செலுத்தினார்.
20 நாட்களுக்கு பிறகு டெலிவரி வழங்கப்பட்ட போது ஆர்டரில் 60 சதவீத பொருட்கள் மட்டுமே இருந்துள்ளது. இது குறித்து பழனிவேல் நிறுவனத்திடம் கேட்டதற்கு, மேலும் 25 நாட்கள் கழித்து வழங்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பழனிவேல் 25 நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது 100 சதவீதம் முழுமையாக வழங்கப்பட்டு விட்டதாக நிறுவனத்தார் கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து அந்த நிறுவன நிர்வாகத்திடம் பலமுறை பேசியும் எந்த பதிலும் இல்லாததால், மனமுடைந்த பழனிவேல், அந்த நிறுவனத்தை தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.
இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் எந்த சுமூக தீர்வும் ஏற்படாததால், தனியார் நிறுவனம் மோசடி செய்து விட்டதாக மத்திகிரி போலீசில் பழனிவேல் புகார் அளித்துள்ளார். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.