உள்ளூர் செய்திகள்

போலி பில்களை எடுத்து சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார்

Published On 2023-07-19 13:04 IST   |   Update On 2023-07-19 13:04:00 IST
  • சுகாதார பணியில் 25 தற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
  • வேலைக்கு வராத நாட்களில், போலியாக கையொப்பமிட்டு பணம் மோசடி நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது.

பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் ஆலாம்பாளையம் பேரூராட்சி 10.50 சதுர கிலோமீட்டர் பரபரப்பளவு கொண்டது.

மோசடி

இங்கு சுமார் 30 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். சுகாதார பணியில் 25 தற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வேலைக்கு வராத நாட்களில், போலியாக கையொப்பமிட்டு பணம் மோசடி நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது.

மேலும் பேரூராட்சி அலுவலர்கள் போலி பில் மூலம் பணம் மோசடி செய்துள்ளதாகவும், கட்டடம் கட்டுவதற்கான புளுபிரிண்ட் அனுமதி பெறுவதிலும், பேரூராட்சி அலுவலர்கள் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை

இதன்பேரில், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான போலீசார், கடந்த 13-ந் தேதி முதல் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக கடந்த 6 நாட்களாக பேரூராட்சி அலுவலர்களை நேரில் அழைத்து விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்தனர்.

தொடர்ச்சியாக நேற்று பேரூராட்சி டைபிஸ்ட், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் துப்புரவு மேஸ்திரி ஆகியோரிடமும் விசாரணை செய்தனர். மேலும் இதுதொடர்பாக நிறைய போலி பில்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறுகையில், பேரூராட்சி அலுவலர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையின் இறுதியில் தான் புகார் குறித்த உண்மை நிலை தெரியவரும் என்றனர்.

Tags:    

Similar News