உள்ளூர் செய்திகள்

நாமக்கல் அருகே மளிகை கடையில் மது விற்ற தி.மு.க நிர்வாகி கைது

Published On 2023-06-09 07:14 GMT   |   Update On 2023-06-09 07:14 GMT
  • தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்தனர்.
  • தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் பாரில் மது குடித்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாமக்கல்:

தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து, தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் பாரில் மது குடித்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவங்கள், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதையடுத்து, தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில், எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் கூடுதல் எஸ்.பி., ராஜூ தலைமையில், கலால்துறை உதவி கமிஷனர் செல்வி, இன்ஸ்பெக்டர் அம்பிகா, எஸ்.ஐ.முருகன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் காரணமாக, மாவட்டத்தில் லைசென்ஸ் இல்லாத பார்கள், சந்துக் கடைகள் பெருமளவில் குறைந்துள்ளன. இருந்தும், ஆங்காங்கே ஒரு சில சந்துக் கடைகளில், கள்ளத்தனமாக மது விற்பனை நடந்து வருகிறது.

இந்த நிலையில், மோக னூர் அடுத்த ஆண்டாபுரம் பகுதியில், கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக, நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணனுக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில், மோகனூர் எஸ்.ஐ., சிவக்குமார் தலைமையி லான போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அப்பகுதியில் மளிகை கடை நடத்திவரும், தி.மு.க கிளை செயலாளர் குமரவேல் (42) என்பவர், தனது கடையில் கள்ளத் தனமக மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் மளிகை கடையில் இருந்து, மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News