நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
- மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, ஆண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது.
- பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து சிப்காட் எதிர்ப்புக்குழு அமைத்து, தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, ஆண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது.
இதற்குத் தேவையான நிலங்களை அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளிடம் கருத்துக்கேட்காமல், சிப்காட் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து சிப்காட் எதிர்ப்புக்குழு அமைத்து, தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதைக் கைவிடக்கோரி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அன்புமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சிவகுமார், ரவீந்திரன், லோகநாதன், ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தளி எம்.எல்.ஏ ராமச்சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் குணசேகரன், பொது செயலாளர் மாசிலாமணி, துணைத்தலைவர் லகுமையா, துளசிமணி, கொ.ம.தே.க தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், ஒருங்கிணைந்த மாவட்ட விவசாயி அணி செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கி பேசினர்.
திரளான கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள், கொ.ம.தே.க. நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, மோகனூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடவேண்டும், நாமக்கல் நகராட்சி கழிவுநீர் தூசூர் வழியாகச் சென்று காவிரியில் கலப்பதை தடை செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.