கோவில் நிர்வாகி வீட்டில் பணம் கொள்ளை
- சென்னையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார்.
- மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டு காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜெயராமன் (70). இவர் மூங்கில்துறைப்பட்டில் உள்ள பாலமுருகன் கோவிலில் நிர்வாகியாக இருந்து வருகிறார். ஜெயராமன், சென்னையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். இந்த நிலையில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினா் இதுபற்றி செல்போன் மூலம் ஜெயராமனுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அவர் கொடுத்த தகவலின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் ஜெயராமனின் வீட்டுக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த கோவில் பணம் ரூ.35 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.