ஓசூர் பகுதியில் மேயர் சத்யா திடீர் ஆய்வு
- ஓசூர் 43-வது வார்டு பகுதியில் மேயர் எஸ்.ஏ. சத்யா ஆய்வு செய்தார்.
- குடிநீர் வசதிகளை சரியான முறையில் செய்து கொடுக்க வேண்டும் என அறிவுத்தினார்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 43-வது வார்டில் ரூ. 2 கோடியே 50 லட்சம் மதிப்பிலும், 44 -வது வார்டில் 2.20 கோடி ரூபாய் மதிப்பிலும் மண் சாலையை தார் சாலையாக்கும் திட்டம் மற்றும் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மொத்தம் 4 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பில் தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
ஓசூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட உள்ளதால், அந்த பணிகள் மேற்கொள்ளப்படாத இடங்களில் மட்டும் சாக்கடை கால்வாய், மழை நீர் வடிகால் மற்றும் போர்வெல் அமைத்து கொடுக்கும் பணியும் நடந்து வருகிறது.
இந்நிலையில் 43-வது வார்டுக்குட்பட்ட தீபம் நகர், தின்னூர், காவிரி நகர், வி.ஐ.பி., நகர், காமராஜ் காலனி மற்றும் 44-வது வார்டுக்குட்பட்ட அபிராமி கார்டன் கர்ணூர், பழைய மத்திகிரி, ஆகிய பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் சினேகா,பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோருடன் சென்று மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் தரம், அதன் உயரம், அகலம் குறித்து, சத்யா ஆய்வு செய்தார். மேலும் மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை சரியான முறையில் செய்து கொடுக்க வேண்டும் எனவும் மாநகராட்சி அலுவலர்களுக்கு அவர் அறிவுத்தினார்.
இந்த ஆய்வின் போது துணை மேயர் ஆனந்தய்யா, கவுன்சிலர் மஞ்சுளா முனிராஜ், உள்பட பலர் உடன் இருந்தனர்.