உள்ளூர் செய்திகள்

ஒர்க் ஷாப் உரிமையாளர் வீட்டில் திருடிய வாலிபர் கைது

Published On 2023-05-13 12:45 IST   |   Update On 2023-05-13 12:45:00 IST
  • சமயநல்லூரில் ஒர்க் ஷாப் உரிமையாளர் வீட்டில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • 3½பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது.

வாடிப்பட்டி

மதுரை அருகே உள்ள சமயநல்லூர் வி.எம்.டி.நகர் வைகை ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்த பகுதியில் கார்களை பழுதுபார்க்கும் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.

கண்ணன் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 4-ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு மகளை அழைத்து கொண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் இரவில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3½பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது. திருட்டு போன நகைகள் மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.1லட்சத்து 41ஆயிரம் ஆகும்.

தனது வீட்டில் நடந்த திருட்டு குறித்து சமயநல்லூர் போலீஸ் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். திருட்டில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் சமயநல்லூர் பஸ் நிறுத்த பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

இதனால் சந்தேகமடைந்த அவர், அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது அவர் மேலூர் அருகே உள்ள உச்சப்பட்டியை சேர்ந்த சந்திர குமார்(வயது38) என்பதும், கண்ணன் வீட்டில் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை திருடியது அவர் தான் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்திரகுமாரிடம் இருந்து கண்ணன் வீட்டில் திருட்டு போன நகைகள் மீட்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News