அரசு பள்ளிகளில் தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி
- அலங்காநல்லூர், பாலமேடு அரசு பள்ளிகளில் தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
- பேரூராட்சியில் உள்ள 15 வார்டு பணியாளர்கள் ஊர்வலமாக சென்று பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் கூட்டங்களில் கலந்து கொண்டு பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் குப்பைகளை வீடுகளிலேயே தரம் பிரித்து வழங்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்கவும் கேட்டுக் கொண்டனர்.
மேலும் இது தொடர்பான விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து "என் குப்பை எண் பொறுப்பு" தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, துணை தலைவர் சுவாமிநாதன், செயல் அலுவலர் ஜீலான் பானு மற்றும் கவுன்சிலர்கள், உடற்கல்வி ஆசிரியர் காட்வின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று பாலமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பாலமேடு பேரூராட்சி சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு தலைவர் மனோகரவேல் பாண்டியன், யூனியன் ஆணையாளர் கதிரவன் முன்னிலை வகித்தனர். தூய்மை மேற்பார்வையாளர் முத்தழகு வரவேற்றார். பேரூராட்சியில் உள்ள 15 வார்டு பணியாளர்கள் ஊர்வலமாக சென்று பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.