உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பலி

Published On 2023-01-08 08:45 GMT   |   Update On 2023-01-08 08:45 GMT
  • வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.
  • நாகமலை புதுக்கோட்டை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மதுரை

மதுரையில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.

மதுரை ஏற்குடியைச் சேர்ந்தவர் பானுமதி (வயது 55). சம்பவத்தன்று இரவு இவர் மதுரை-தேனி மெயின் ரோட்டில் நடந்து சென்றார். வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.

இதில் பானுமதிக்கு தலையில் அடிபட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நாகமலை புதுக்கோட்டை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முனிச்சாலை கரீம்சா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அன்வர் பாட்ஷா (67). இவர் நேற்று மாலை சைக்கிளில் சென்றார். பழைய குயவர்பாளையம் சாலையில் சென்றபோது கேரள பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அன்வர் பாட்ஷா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதிவேகமாக பஸ் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தாளவாடியை சேர்ந்த டிரைவர் ரங்கராஜு (45) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அலங்காநல்லூரை அடுத்த வாவிடமருதூரை சேர்ந்த மணிகண்டன் மகன் ராமசாமி (24). கூலித் தொழிலாளி. நேற்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். புது நத்தம் மெயின் ரோடு, நாராயணபுரம் அருகே- வேகமாக வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த ராமசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே, அவர் பரிதாபமாக இறந்தார்.

மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக பஸ்சை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய, உத்தப்பநாயக்கனூர், இந்திரா நகரை சேர்ந்த டிரைவர் செல்வத்திடம் (47) விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News