தமிழ்நாடு செய்திகள்

பலத்த சூறைக்காற்று - ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை

Published On 2026-01-25 10:23 IST   |   Update On 2026-01-25 10:23:00 IST
  • ராமேசுவரம் பகுதியில் சாலைகளில் மணல் புழுதியாக பறந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர்.
  • மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடைவிதித்தனர்.

ராமேசுவரம்:

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதால் ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதலே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் படகுகள் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

பலத்த சூறாவளி காற்று காரணமாக பாம்பனில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் பகுதியில் சாலைகளில் மணல் புழுதியாக பறந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர். இதேபோல ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியிலும் வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறவாளி காற்று வீசியது.

இந்தநிலையில் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து நேற்று விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தயாராகி இருந்தனர். ஆனால் மீன் துறை அதிகாரிகள் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதோடு கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கை வந்துள்ளதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல டோக்கன் வழங்க மறுத்து விட்டனர். மேலும், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் இருக்கும் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடைவிதித்தனர்.

இதன் காரணமாக, ராமேசுவரம் பகுதியிலும் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 1300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 600-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதே போல் பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளிலும் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்த தடை உத்தரவால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் நேற்று சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். இதேபோல மண்டபம் பகுதியிலும் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் தெற்கு துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

Tags:    

Similar News