தமிழ்நாடு செய்திகள்

மறைந்த ஜெயலலிதா... உடைந்த அதிமுக... பெருகும் கட்சிகள்... தற்போதுவரை 8!

Published On 2026-03-13 20:16 IST   |   Update On 2026-03-13 20:16:00 IST
  • பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • தற்போது அமமுக நிலையாக தொடர்கிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பலரும் இரும்புப் பெண்மணி எனக்கூறுவார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை ஒரு பெண்ணாக ஒரு அரசியல் கட்சியை எந்த உடைதலும் இல்லாமல் கொண்டுசென்றதாக இருக்கலாம். ஆனால் அவர் மறைந்த 2016க்கு பிறகு அந்த நிலை மாறியது. 2016 டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக கட்சி உட்கட்சிப் பூசல்களால் பலமுறை பிளவுபட்டது. 

அதிமுகவில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் பிரிந்து சென்ற தலைவர்கள் பல புதிய கட்சிகளைத் தொடங்கியுள்ளனர். ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆளுக்கொரு கட்சி என்ற கணக்கில் தொடங்குகிறார்கள். ஆனால் இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், புதிதாக தொடங்கப்படும் கட்சிகள் அனைத்தும் அதிமுக பெயரில் கொண்டே தொடங்கப்படுகின்றன. அக்கட்சிகள் குறித்து பார்ப்போம்.

தற்போதுவரை 8 கட்சிகள்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா என்பவர், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை எனும் அரசியல் அமைப்பை தொடங்கினார். இரட்டை இலை சின்னத்திற்கும் உரிமைக் கோரினார். ஆனால் இரண்டே வருடங்களில் இந்த அரசியல் வாழ்க்கை முடித்துக்கொண்டு அதிமுகவில் இணைவதாக அறிவித்தார்.

ஜெயலலிதா மறைந்த அடுத்த ஆண்டே டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வேகத்தில் 2018-ல் 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் டிடிவி.

இதனைத்தொடர்ந்து தீபாவின் கணவர் மாதவன் எம்.ஜி.ஆர். ஜெ.ஜெ. திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார். அதன்பின் டிடிவி தினகரன் கட்சித் தொடங்கிய அதே ஆண்டு, சசிகலாவின் அக்கா மகனும் டிடிவி தினகரனின் தம்பியுமான பாஸ்கரன், அண்ணா எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் 2018ஆம் ஆண்டு கட்சி தொடங்கினார்.

மீண்டும் மீண்டும் என 2018ஆம் ஆண்டிலேயே மூன்றாவது கட்சியும் உருவானது. சசிகலாவின் சகோதரரான வி. கே. திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்றும் கட்சியைத் தோற்றுவித்தார். அதற்குள் கட்சிக்குள் அடுத்த வெடிப்பு.

ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டாக இல்லாமல், ஒற்றை தலைமை என்ற கோரிக்கை எழுந்தது. இதன் விளைவாக, ஜூலை 2022 பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

இச்சூழலில் கடந்த பிப்ரவரியில் இரண்டு கட்சிகள். திமுக, அதிமுக, தேமுதிக, பாமக என தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகள் அனைத்திலும் பணியாற்றிய இவர் பிப்ரவரியில் எம்.ஜி.ஆர் அதிமுக என்ற கட்சியைத் தொடங்கினார்.

இதனையடுத்து ஜெயலலிதாவின் ஆஸ்தான தோழியான சசிகலா கடந்த மாதம் ஒரு கட்சியைத் தொடங்கினார். கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் இன்று அறிவித்தார்.'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' (அஇபுதமமுக) என்பது புதிய கட்சியின் பெயராகும்.

இதனைத்தொடர்ந்து பெங்களூரு புகழேந்தி புரட்சி அதிமுக என்ற கட்சியைத் தொடங்கினார். அதிமுக என்று கட்சித் தொடங்கிய அவர், இன்று திமுகவிற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News