கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வராகி அம்மன், முக்கண் சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
முக்கண் சாய்பாபா, வராகி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
- முக்கண் சாய்பாபா மற்றும் வராகி அம்மனுக்கு புதிதாக ஆலயம் கட்டும்பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
- பணிகள் முடிந்ததை அடுத்து நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 4 மணிக்கு பஞ்சமி திதியில் மகா கணபதி யாக வேள்வி பூஜை நடந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் அமைந்துள்ள முக்கண் சாய்பாபா மற்றும் வராகி அம்மனுக்கு புதிதாக ஆலயம் கட்டும்பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
பணிகள் முடிந்ததை அடுத்து நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 4 மணிக்கு பஞ்சமி திதியில் மகா கணபதி யாக வேள்வி பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். நேற்று காலை திருமுறை பாராயணம், 2-ம் கால யாக வேள்வி பூஜை நடந்தது.
காலை 7 மணிக்கு மேல் பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. காலை 8 மணிக்கு விநாயகர், முக்கண் சாய்பாபா, வராகி அம்மன் ஆலயத்தில் புனித நீரூற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர்.
இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகர், முக்கண் சாய்பாபா, வராகி அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.