காரைக்கால்-திருச்சி ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்
- காரைக்காலில் இருந்து திருச்சி வரை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
- பயணிகள் ரெயில் காரைக்கால்-தஞ்சை இடையே இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகூர், நாகை, திருவரூர், நீடாமங்கலம், தஞ்சாவூர் வழியாக திருச்சி வரை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
இந்த ரெயில் தினசரி மதியம் 3.10 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு திருச்சியை சென்றடையும், மறுமார்க்கத்தில் தினசரி காலை 9.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.05 மணிஅளவில் காரைக்கால் வந்தடையும்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி முதல் நீடாமங்கலம் வரை ரெயில் தண்டவாளம் பராமரிப்பு உள்பட பல்வேறு பணிகள் கடந்த 3மாத காலமாக நடந்து வந்தன.
இதன் காரணமாக காரைக்கால் -திருச்சி பயணிகள் ரெயில் காரைக்கால்-தஞ்சை இடையே இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டது.
இதனால் இந்த ரெயிலை நம்பி இருந்த காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பயணிகள் கடந்த 3 மாதங்களாக கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதால் நேற்று முதல் காரைக்கால்-திருச்சி பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது. இது ரெயில் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.