நாகர்கோவிலில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
- வீட்டில் தூக்கில் தொங்கியதால் பரபரப்பு
- நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணை
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி அருகுவிளையை சேர்ந்தவர் வினு. இவரது மகள் அபிராமி.
இவருக்கும் பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் காலனியை சேர்ந்த மனோஜ் என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு மனோஜின் தாயாரும், அவரது உறவினர்களும் அபிராமிக்கு சிறு சிறு தொந்தரவுகளை செய்து வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அபிராமி தனது தந்தை வினுவிடம் கூறியுள்ளார். வினு மகளை சமாதானப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அபிராமி திடீரென அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் பூதப்பாண்டி போலீசுக்கும் அபிராமியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.
பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.தூக்கில் பிணமாக தொங்கிய அபிராமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வினு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் ஆகி 4 மாதங்களே ஆவதால் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணமான 4 மாதத்தில் புது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.