உள்ளூர் செய்திகள்

குளச்சல் அருகே ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

Published On 2022-09-02 10:58 GMT   |   Update On 2022-09-02 10:58 GMT
  • ஆடுகளுக்கு தழை போடுவதற்கு வீட்டருகில் உள்ள பலாமரத்தில் இரும்பு கம்பி மூலம் இலை பறித்துக்கொண்டிருந்த போது விபத்து
  • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி:

குளச்சல் அருகே கல்லுக்கூட்டத்தை சேர்ந்தவர் சூசை மிக்கேல் (வயது 67). இவர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ரீத்தம்மாள் (60). கடந்த சில ஆண்டுகளாக சூசைமிக்கேல் வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று காலை இந்த ஆடுகளுக்கு தழை போடுவதற்கு வீட்டருகில் உள்ள பலாமரத்தில் இரும்பு கம்பி மூலம் இலை பறித்துக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்ப்பாராமல் அருகில் சென்று கொண்டிருந்த மின் கம்பி மீது உரசியது. இதில் இரும்பு கம்பி வழியே மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு மயங்கினார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சூசைமிக்கேல் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி ரீத்தம்மாள் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News