உள்ளூர் செய்திகள்

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் தடுத்தனர்.

கந்து வட்டி கொடுமை: கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பெண்

Published On 2022-06-28 08:59 GMT   |   Update On 2022-06-28 08:59 GMT
  • கந்து வட்டி கொடுமையால் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் பெண் தீக்குளிக்க முயன்றார்.
  • கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு தம்பதியினர் தங்கள் மகளுடன் வந்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு தம்பதியினர் தங்கள் மகளுடன் வந்தனர். அப்போது அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பையில் இருந்த மண்எண்ணையை எடுக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, கையில் வைத்திருந்த மண்எண்ணை கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் விருத்தாசலம் அருகே உள்ள கோட்டேரி கிராமத்தை சேர்ந்த ராயப்பன் (வயது 47) என்பதும் அவரது மனைவி வேளாங்கண்ணி (37), இவர்களது மகள் ஆரோக்கிய ஷாலினி (வயது 22) என்பதும், ஆரோக்கிய ஷாலினியின் கல்லூரி படிப்புக்காக ராயப்பன், அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கதிரவனிடம் கடந்த 2018 -ம் ஆண்டு ரூ.50 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.

பின்னர் கடந்த ஆண்டு வட்டியுடன் பணத்தை திரும்ப செலுத்த சென்ற போது, கதிரவன் தனக்கு வட்டியுடன் ரூ.3 லட்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இல்லையெனில் பூர்வீக சொத்தை தனது பெயரில் கிரையம் செய்து கொடுக்கும்படி மிரட்டி வருகிறார். இது தொடர்பாக ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் மண்எண்ணை கேனுடன் வந்ததாக தெரிவித்தனர். பின்னர் போலீசார் இது தொடர்பாக மனு அளியுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இருப்பினும் கலெக்டர் அலுவலகத்திற்கு தம்பதியினர் மண்எண்ணை கேனுடன் வந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News