தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி படுகாயம்
- படுகாயமடைந்தவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
- விபத்து குறித்து தென்தாமரைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
கயத்தாறு தெற்கு ஆத்திகுளத்தை சேர்ந்தவர் மகேஷ்வரன் (வயது 42). இவர் குடும்பத்துடன் நாகர்கோவில் ராமன்புதூர் சற்குண வீதியில் தங்கி இருந்து கடைகளுக்கு பலகாரங்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
மகேஷ்வரன் தனது மோட்டார் சைக்கிளில் கீழ மணக்குடியிலிருந்து மேல மணக்குடி நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது கீழமணக்குடி பாலத்தில் செல்லும்போது எதிரே வடக்கன்குளம் பூஞ்சோலை தெருவை சேர்ந்த அந்தோணி ராஜேந்திரன் (வயது 34) என்பவர் ஓட்டி வந்த டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக மகேஷ்வரன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மகேஷ்வரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் மகேஷ்வரனை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தென்தாமரைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.