உள்ளூர் செய்திகள்

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு

Published On 2022-12-23 05:48 GMT   |   Update On 2022-12-23 05:48 GMT
  • சைனிக் பள்ளிகளில் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு 25சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
  • கவுரவ ஆணையம் தகுதி வரை உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

திருப்பூர் :

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டு வழங்கப்பட உள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பள்ளிக்கல்வி, கலை அறிவியல் கல்லூரி, தொழிற்கல்வி படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை தொகுப்பு நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. 2022-23-ம் கல்வியாண்டு முதல் கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2 ஆயிரம், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.4 ஆயிரம், 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புக்கு ரூ.5 ஆயிரம், 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. சைனிக் பள்ளிகளில் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு 25சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சைனிக் பள்ளியில் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் 2022-23-ம் கல்வியாண்டு முதல் சைனிக் பள்ளியில் படிப்பதற்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

போர் மற்றும் போர் நடவடிக்கையில் உயிரிழந்தோரை சேர்ந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த கருணைத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இதில் உடல் ஊனமுற்றிருந்தால் கருணைத்தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டு தமிழ்நாட்டில் வசிக்கும் படை அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள், கவுரவ ஆணையம் தகுதி வரை உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குனர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், அறை எண்.523, 5-வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூர்-641 604 என்ற முகவரியிலும், 0421 2971127 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   

Tags:    

Similar News