தஞ்சையில், சாலை மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர் கைது
- கருப்பு பலூன் பறக்க விட முயன்றதை அறிந்த போலீசார் விரைந்து வந்து பலூன்களை பறிமுதல் செய்தனர்.
- இந்து மக்கள் கட்சியினர் கோ பேக் ராகுல் காந்தி என்ற பதாகையுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3500 கி.மீ. தூரத்திற்கு ராகுல் காந்தி பாதயாத்திரை செல்கிறார்.
இன்று மாலை அவரது பாதயாத்திரை தொடங்குகிறது.
இதனை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிலையில் ராகுல்காந்தி தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதியம் தஞ்சை ரயிலடியில் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திராவ் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர்.
பின்னர் அவர்கள் கருப்பு பலூன் பறக்க விட முயன்றனர். உடனே போலீசார் விரைந்து வந்து பலூன்களை பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சியினர் கோ பேக் ராகுல் காந்தி என்ற பதாகையுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ராகுல் காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
மேலும் கைது செய்யப்பட்ட அர்ஜுன் சம்பத்தை உடனே விடுவிக்க கோரியும் கோசங்களை எழுப்பினர். இதையடுத்து இந்து மக்கள் கட்சியினர் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.