உள்ளூர் செய்திகள்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில், அங்கன்வாடி பணியாளர்கள் விடிய விடிய காத்திருப்பு போராட்டம்

Published On 2023-04-26 15:02 IST   |   Update On 2023-04-26 15:02:00 IST
  • அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
  • 5 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பிரதான மையங்களுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

தஞ்சாவூர்:

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவதுபோல, அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் விடுமுறை வழங்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்துள்ள அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பிரதான மையங்களை சிறு மையங்கள் ஆக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பிரதான மையங்களுடன் இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் நேற்று மாலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட நிர்வாகி பாரதி தலைமை தாங்கினார்.

மாநில செயலாளர் கலா, மாவட்ட செயலாளர் விஜி, துணை செயலாளர் பத்மாவதி, பொருளாளர் புவனேஸ்வரி, மாவட்ட தலைவர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தை சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் ஜெயபால் தொடங்கி வைத்தார்.

இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரெங்கசாமி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் அன்பு, உள்ளாட்சி நிதி தணிக்கை சங்க மாநில தலைவர் அம்பேத்கார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாலையில் தொடங்கிய போராட்டம் இரவு முழுவதும் நீடித்தது.

விடிய விடிய நடந்த போராட்டம் இன்று 2-வது நாளாகவும் தொடர்ந்தது.

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை நீடித்து வருகின்றனர்.

அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News