ஊட்டியில் பலாப்பழ வாசனையால் ஊருக்குள் வரும் யானைகள்
- தற்போது தட்டப்பள்ளம், முள்ளூர், மாமரம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் முகாமிட்டு உள்ளன.
- தேயிலை தொழிலாளிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கி உள்ளது. இதனால் சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக குட்டிகளுடன் ஊருக்குள் புகுந்து வருகின்றன.
அவை தற்போது தட்டப்பள்ளம், முள்ளூர், மாமரம் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. அவ்வாறு முகாமிட்டுள்ள காட்டு யானைகள் பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களில் புகுந்து விடுகிறது. சிலநேரங்களில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உலா வருகிறது.
இதனால் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மற்றும் நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
இதற்கிடையே தட்டப்பள்ளம் பகுதியில் தற்போது முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.