உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் தங்கும் விடுதிகளில் கட்டணம் உயர்வு

Published On 2023-04-17 10:00 GMT   |   Update On 2023-04-17 10:00 GMT
  • தொடர் விடுமுறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
  • ஓட்டல்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

ஊட்டி,

தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

சமவெளியில் வெயில் நிலவி வரும் அதே வேளை யில், நீலகிரி மாவட்டத்தில் குளுமையான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.இதையடுத்து நீலகிரியில் நிலவி வரும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.கடந்த 2 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருமே அறை எடுத்து இங்கு தங்குவது வழக்கம்.

இதற்காக அவர்கள் சுற்றுலாவுக்கு ஊரில் இருந்து புறப்படும் முன்பே இணையதளத்தில் சென்று விடுதியை புக் செய்வது வழக்கம்.

தற்போது கோடை சீசன் தொடங்கி நடந்து வருகிறது. சமவெளி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பலர் தங்களது குடும்பத்தி னருடன் ஊட்டிக்கு சுற்றுலா வருகின்றனர்.

இந்த நிலையில் தங்கும் விடுதிகளில் வாடகை கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து உள்ளது. கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை களில் விடுதி கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மிக அதிகமாகும். இதனால் ஊட்டிக்கு வரக்கூடிய நடுத்தர மற்றும் ஏழை சுற்றுலா பயணிகள் மி கவும் பாதிப்படைந்து ள்ளனர். விடுதி கட்டணம் மட்டு மின்றி, லாட்ஜ் அறைகள், உணவு பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். காசு அதிகம் கொடுத்து உணவு வாங்கி சாப்பிட்டாலும், அந்த உணவு தரமாக இருக்க வேண்டும் என அனை வரும் எதிர்பார்ப்பது தான். ஆனால் அங்குள்ள பல ஓட்டல்களில் காசை அதிகமாக வாங்கி கொண்டு தரமற்ற உணவுகளை விற்பதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

சமீபத்தில் கூட ஊட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் கெட்டுபோன உணவு பரிமாறப்பட்டதாக பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணி வீடியோவை பகிர்ந்திருந்தது நினைவுகூரத்தக்கது.

2 நாள்கள் ஊட்டிக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்வையிட்டு, நிம்மதியாக தங்கி செல்லலாம் என வரும் சுற்றுலா பயணிகளுக்கு விடுதி கட்டணம் உயர்வு, தரமற்ற உணவு போன்றவை அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.

எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News