குன்னூரில் பலத்த மழை- சாலையில் மரம் விழுந்தது
- பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன.
- லையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்தது. இதனால் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன.
கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் சற்று மழை குறைந்திருந்தது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில் நேற்று மாலை குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து நள்ளிரவு 2 மணிக்கு பலத்த மழை கொட்டி தீர்த்தது. அருவங்காடு, வண்டிச்சோலை, ரெயில்நிலையம், வண்ணாரபேட்டை, பெட்போர்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.
இந்த மழைக்கு இன்று காலை குன்னூரில் இருந்து டால்பினோஸ் செல்லும் வழியில் சாலையோரம் நின்றிருந்த ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புதுறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர். மேலும் மழை காரணமாக கடும் குளிரும் நிலவி வருகிறது.
கூடலூர், பந்தலூர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சேரம்படி நாயகன்சோலையில் உள்ள பள்ளிக்கூடத்தின் மதில் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்க ப்பட்டது.