உள்ளூர் செய்திகள்

பஸ் நிலையத்தில் இருந்த அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

விபத்தில் காயமடைந்த மாணவிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

Published On 2023-07-04 11:21 IST   |   Update On 2023-07-04 11:21:00 IST
  • 2019 ஆம் ஆண்டு அவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேடசந்தூர் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
  • இந்தத் தொகையை போக்குவரத்து கழகத்தினர் செலுத்த தவறியதால் வேடசந்தூர் பஸ் நிலையத்தில் நின்று இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குஞ்சுவீரன்பட்டியை சேர்ந்த மூர்த்தி மகள் அகல்யா (வயது 18). இவர் 2014 செப்டம்பர் 18-ந் தேதி கல்லூரிக்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்குச் செல்வதற்காக வேடசந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து ஆர்.கோம்பை செல்லும் அரசு பஸ்சில் சென்றார். கன்னிமார்புரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பஸ்சில் இருந்து திடீரென அகல்யா கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் படிப்பை தொடர முடியாமல் போனது.

இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்நிலையில் அகல்யா தனக்கு இழப்பீடு கேட்டு வேடசந்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் 2019 ஆம் ஆண்டு அவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேடசந்தூர் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்தத் தொகையை போக்குவரத்து கழகத்தினர் செலுத்த தவறியதால் சார்பு நீதிபதி சரவணகுமார் பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதன்படி வேடசந்தூர் பஸ் நிலையத்தில் நின்று இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் செல்லச்சாமி மற்றும் பழனிச்சாமி ஆகியோர் ஜப்தி செய்து வேடசந்தூர் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News