உள்ளூர் செய்திகள்

பெரியார் கலைக் கல்லூரிக்கு செல்ல பஸ்சிற்காக காத்திரிக்கு மாணவர்களை படத்தில் காணலாம்.

கடலூர் தேவனாம்பட்டினத்திற்கு காலதாமதமாக வந்த அரசு பஸ்:கல்லூரி மாணவர்கள் அவதி

Published On 2023-10-25 07:41 GMT   |   Update On 2023-10-25 07:41 GMT
  • மாவட்ட நிர்வாகம் மாணவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று கூடுதல் பஸ் இயக்கப்படுமென உத்தரவாதம் அளித்தனர்.
  • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கடலூர்:

கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடலூர் பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பஸ் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் கல்லூரிக்கு சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு ஷேர் ஆட்டோ கவிழ்ந்து மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 8-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து கல்லூரி நேரத்தில் கூடுதலாக அரசு பஸ் விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மாவட்ட நிர்வாகம் மாணவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று கூடுதல் பஸ் இயக்கப்படுமென உத்தரவாதம் அளித்தனர். இதனையடுத்து ஷேர் ஆட்டோக்களை தவிர்த்த மாணவர்கள், கடந்த சில தினங்களாக அரசு பஸ்சில் கல்லூரிக்கு சென்று வந்தனர்.

இன்று காலை கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு செல்வதற்காக மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே காத்திருந்தனர். ஆனால், நீண்ட நேரமாக மாணவர்கள் காத்திருந்தும் அரசு பஸ் வரவில்லை. நேரம் ஆக, ஆக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அந்த பகுதி பரபரப்பானது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பஸ் வரவில்லை என மாணவர்கள் மத்தியில் குற்றச்சாட்டும் எழுந்தது. அப்போது ஒரு மணி நேரம் தாமதமாக அரசு பஸ் வந்தது. அதில் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். வருங்காலங்களில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ்களை குறித்த நேரத்தில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News