திருவாரூரில் ஆசிரியர் கூட்டணியினர் கூட்டம் நடந்தது.
திருவாரூரில், ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழு கூட்டம்
- காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
- மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் மற்றும் குறிப்பேடு வழங்க வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.
மாநில துணைச் செயலாளர் ஜூலியஸ், மாவட்டப் பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு நிதி சார்ந்த தடையின்மை சான்று உடனடியாக வழங்க வேண்டும். ஆசிரியர்கள் கல்வி சான்றுகளுக்கு உண்மைத்தன்மை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள யூகேஜி மற்றும் எல்கேஜி வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா புத்தகம் மற்றும் குறிப்பேடு வழங்க வேண்டும். பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்டத்தில் கூடுதல் விவரம் சேகரித்தல் உள்ளிட்ட பணிகளை ஆசிரியர்கள் மீது சுமத்த கூடாது.
கூட்டத்தில் முத்துப்பேட்டை, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் ஆகிய வட்டாரங்களின் உறுப்பினர் சேர்க்கைகளை முடித்து பட்டியல், அடிக்கட்டு, தொகை ஆகியவைகளை வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர்.
கூட்டத்தில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழ்வாணன், செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.