தென்காசி அரசு மருத்துவமனையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எலும்பு முறிவு சிகிச்சை
- சரஸ்வதிக்கு 2 மாதங்களுக்கு முன்னர் இடது கை எலும்பு முறிந்தது.
- மருத்துவரின் ஆலோசனை பெற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
தென்காசி:
கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி சரஸ்வதி (வயது43).
இவருக்கு 2 மாதங்களுக்கு முன்னர் இடது கை எலும்பு முறிந்து சிகிச்சைகாக பல மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளார். இதயத்தில் இதய வால்வு பிரச்சினை இருந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய யாரும் முன் வரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் சிகிச்சைக்காக சரஸ்வதியை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு காளிமுத்து கடந்த 4-ந் தேதி அதிக வலியும், வீக்கம் இருப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை எலும்பு முறிவு மருத்துவர்கள் சரஸ்வதியின் இடது கையை பரிசோதித்து, நுண்கதிர் படம் எடுத்துப் பார்த்து அவருக்கு இன்னும் அந்த எலும்பு சேரவில்லை என்றும் அது மாறுபட்ட கோணத்தில் இருப்பதை அறிந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் அறிவுரை யின்படி உடனடியாக இருதய சிகிச்சை நிபுனர் மற்றும் மயக்க மருத்துவரின் ஆலோசனை பெற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இருதய பரிசோதனை செய்யும் போது இருதயத்தில் மூன்று வால்வுகளில் சுருக்கம் இருந்தது தெரிய வந்தது.
இடது கையில் உடைந்த 2 எலும்புகளுக்கும் இதயவியல் நிபுணரின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினரை கலெக்டர் ஆகாஷ், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், நலப்பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா ஆகியோர் பாராட்டினர்.