உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே பரிதாபம் வாகனம் மோதி தந்தை-மகள் பலி போலீசார் விசாரணை

Published On 2023-08-25 09:18 GMT   |   Update On 2023-08-25 09:18 GMT
  • அடையாளம் தெரியாத வாகனம் தனசேகர், அவரது மகள் மதுவினா மீது வேகமாக மோதியது.
  • சிகிச்சை பலனின்றி தனசேகர், அவரது மகள் மதுவினா பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர்:

கடலூர் அருகே வாகனம் மோதி தந்தை, மகள் பலியானார்கள். கடலூர் முதுநகர் அடுத்த தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 41). கூலி வேலை செய்து வந்தார். இவரது மகள் மதுவினா (6). அதே பகுதியில் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று நள்ளிரவு தனசேகர் அவரது மகள் மதுவினாவை கடலூர் - விருத்தாச்சலம் சாலை எஸ்.என். நகரில் அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடந்து செல்லும் போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் தனசேகர், அவரது மகள் மதுவினா மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இவர்களது சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அங்கு வந்து பலத்த காயமடைந்த 2 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தனசேகர், அவரது மகள் மதுவினா பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாகனத்தை யார் ஓட்டியது ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை- மகள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News