போராட்டத்தில் ஈடுபட்ட பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர்.
ரிக் வண்டி உரிமையாளர் குடும்பத்துடன் உண்ணாவிரதம்
- ஸ்ரீ அம்மன் போர்வெல் என்ற நிறுவனத்தை கூட்டாக நடத்தி வந்தனர்.
- ரிக்வண்டி மற்றும் சப்போர்ட் வண்டி என 2 வாகனங்கள் சுமார் 70 லட்ச ரூபாய் மதிப்புள்ளது என தெரிகிறது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த புதுப்பாளையம் காந்தி ஆசிரமம் அருகே உள்ள புளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி, (வயது 37). இவருக்கு கவிதா (32) என்ற மனைவியும் கர்ணிகா (7) என்ற பெண் குழந்தையும், நிஷாந்த் (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
பெரியசாமிக்கு சித்ரா என்ற மூத்த சகோதரி உள்ளார் .இவரது கணவர் சேகர் (48). இவரும், பெரியசாமியும் இணைந்து ஸ்ரீ அம்மன் போர்வெல் என்ற நிறுவனத்தை கூட்டாக நடத்தி வந்தனர். அதில் ரிக்வண்டி மற்றும் சப்போர்ட் வண்டி என 2 வாகனங்கள் சுமார் 70 லட்ச ரூபாய் மதிப்புள்ளது என தெரிகிறது.
இந்த நிலையில் சித்ரா வுக்கும், பெரியசாமிக்கும் சொத்து தகராறு ஏற்படவே ரிக் வாகனத்தை பெரியசாமி தனது அக்காள் சித்ராவின் கணவருக்கே விட்டுக் கொடுத்து விடுவது எனவும், சொத்துக்கள் முழுமையும் பெரியசாமிக்கு விட்டுக் கொடுத்து விட வேண்டும் எனவும் பேசி முடிவான நிலையில் சேகருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2018 -ம் ஆண்டு உடல் நலம் தேறிய சேகர், பெரியசாமிக்கு சொத்து ஆவணத்தை மாற்றி தராமல் இருந்தார். மேலும் அவருக்கு தெரியாமல் அப்போதைய வட்டார போக்குவரத்து அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் உதவியுடன் பெரியசாமியின் கையெழுத்தை போலியாக போட்டு போலி ஆவணத்தை வைத்து ரிக் வாகனத்தையும், சப்போர்ட் லாரியையும் தனது பெயருக்கு சேகர் மாற்றி உள்ளார் என தெரிகிறது இதனை அறிந்த பெரியசாமி புகார் தெரிவிக்கவே அவரை அழைத்து சிலர் மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பெரியசாமி, தனது மனைவி கவிதா மற்றும் குழந்தைகளுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னுடைய ரிக் வாகனத்தை, தனது பெயருக்கு மாற்றம் செய்து தரும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பெரியசாமி தெரிவித்தார். இதனால் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.