உள்ளூர் செய்திகள்

தெர்மாகோல் பேனாவுடன் மனு கொடுக்க வந்த விவசாய சங்கத்தினர்.

சேமிப்பு கிடங்குகள் கட்ட வலியுறுத்தி மனு கொடுக்க வந்த விவசாயிகள்

Published On 2022-09-30 10:41 GMT   |   Update On 2022-09-30 10:41 GMT
  • கையில் பெரிய அளவிலான பேனா படம் வரைந்திருந்த தெர்மாகோலுடன் மனு கொடுக்க வந்தனர்.
  • விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி விவசாய கடன் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்கிட வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அப்போது விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநிலத் துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் தங்களது கையில் பெரிய அளவிலான பேனா படம் வரைந்திருந்த தெர்மாகோலுடன் வந்து மனு கொடுக்க வந்தனர்.

அவர்கள் வைத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டன. ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதுவரை நிவாரணமும் வழங்கவில்லை . இழப்பீம் வழங்கவில்லை. உடனடியாக பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 81 இடங்களில் நெல் சேமிப்பு கிடங்கு கட்டினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். டெல்டா மாவட்டங்களில் உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். விலைவாசி ஏற்றம் உள்ள டி.ஏ.பி. ரூ.1400-ம், பொட்டாஷ் விலை ரூ.1900-ம், காம்ப்ளக்ஸ் விலை ரூ.1500 என உள்ளதை உடனே குறைக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாய பம்பு செட்டுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை உடனே மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். 2022-23-க்கான சம்பா பருவத்திற்கு கூட்டுறவு கடன் உடனே வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி விவசாய கடன் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கொடுத்தனர். தெர்மாகோல் பேனாவுடன் மனு கொடுக்க வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News