உள்ளூர் செய்திகள்

நிலத்தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு: 2 பேர் கைது

Published On 2023-05-05 15:34 IST   |   Update On 2023-05-05 15:34:00 IST
  • சூரிய பிரகாஷ் தனது அடியாட்களுடன் மூங்கில் முடிவு பேருந்து நிலையத்தில் உள்ள, கடையில் அமர்ந்திருந்த பெருமாளை, சரமாரியாக வெட்டி உள்ளார்.
  • கழுத்து, தலை, நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்தது.

ஏரியூர், 

தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள மூங்கில் மடுவு கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது45). விவசாயி. வெற்றிலை தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் இவருடைய அக்கா மகன் சூரிய பிரகாஷ் (வயது 30). இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் விவசாய நிலத்தில், விவசாயம் செய்ய சூரிய பிரகாசின் தாய் வந்ததாகவும், அப்போது அதனை பெருமாள் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 9-ம் தேதி சூரிய பிரகாஷ் தனது அடியாட்களுடன் மூங்கில் முடிவு பேருந்து நிலையத்தில் உள்ள, கடையில் அமர்ந்திருந்த பெருமாளை, சரமாரியாக வெட்டி உள்ளார்.

இதில் பெருமாளின் கைத்துண்டானது. கழுத்து, தலை, நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்தது. அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டதால் கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல், கர்நாடகா பதிவு எண் கொண்ட காரில் காரில் தப்பிச் சென்றது.

இதனை அடுத்து, படுகாயம் அடைந்த பெருமாளை பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏரியூர் போலீசார், கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களின் வாகன பதிவு எண் உதவியுடன் தீவிரமாக தேடினர். இந்நிலையில் கர்நாடகாவுக்கு தப்பி செல்ல முற்பட்ட மூன்று நபர்களை பாலக்கோடு பகுதியில் கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று ஜாகிர்வெங்கடாபுரத்தை சேர்ந்த மணிகுமார் மகன் சச்சின், கூர்க்காம்பட்டியை சேர்ந்த சிவமணியின் மகன் பாலமுரளி ஆகிய இருவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

Similar News