உள்ளூர் செய்திகள்

பூச்சி மருந்து குடித்து விவசாயி சாவு

Published On 2022-08-29 08:53 GMT   |   Update On 2022-08-29 08:53 GMT
  • ரவிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.
  • சிகிச்சை பலனின்றி நேற்று ரவி உயிரிழந்தார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் திருமலை (32). திருமணம் ஆகவில்லை. இவரது அண்ணன் ரவி (40). இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

திருமலை, ரவி ஆகியோரின் பெற்றோர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். எனவே, திருமலை, தனது அண்ணன் ரவியின் வீட்டிலேயே வசித்து வந்தார்.

ரவிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அன்று இரவு மல்லிகை பூவிற்கு அடிக்கும் மருந்தை (விஷம்) குடித்து ரவி வாந்தி எடுத்துள்ளார். மனைவி சத்யா விசாரித்தபோது அவர் எதுவும் கூறவில்லையாம். இதையடுத்து மறுநாள் ரவியின் உடல் நிலை மோசமடையவே உடனடியாக அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் உயர்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ரவி உயிரிழந்தார்.

இதுகுறித்து, ரவியின் தம்பி திருமலை அளித்த புகாரின் பேரில் பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News