உள்ளூர் செய்திகள்

கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி

Published On 2022-06-17 08:08 GMT   |   Update On 2022-06-17 08:08 GMT
  • தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
  • இத்தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு:

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களா–கவே வீடு கட்டி கொள்ள நிதியுதவி வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதியுதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இத்தொழிலாளர்கள் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

நலவாரியத்தில் பதிவு பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து புதுப்பித்தல் உள்ள தொழிலாளர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சொந்த வீட்டுமனை வைத்திருந்தால் 300 சதுரடி அளவில் வீடு கட்ட இடவசதி இருக்க வேண்டும். இந்நிலம் அத்தொழிலாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினர் பெயரில் இருக்க வேண்டும். நில உரிமைக்கான பட்டா முறையாக பெற்றிருக்க வேண்டும்.

நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். அத்தொழிலாளியின் ஆண்டு வருவாய் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

தகுதியானவர்கள் நலவாரிய உறுப்பினர் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், ஒரு புகைப்படம், வருமான வரி சான்றிதழ் ஆகியவற்றை tnuwwb.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விபரம் அறிய ஈரோடு சென்னிமலை சாலை அரசு ஐ.டி.ஐ. பின்புறம் உள்ள ஒருங்கி ணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் இயங்கும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் அல்லது 0424 2275592 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.

இத்தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News