உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2023-09-04 14:22 IST   |   Update On 2023-09-04 14:22:00 IST
  • ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது
  • பவானியில் அதிகபட்சமாக 24 மி.மீ. பதிவு

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மிதமான மழை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடந்த 6 நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதைப்போல் ஈரோடு மாநகர் பகுதி அந்தியூர், சத்தியமங்கலம், கோபி, பவானி போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பவானியில் 24.60 மில்லி மீட்டர் பதிவானது. இதேபோல் கோபி, ஈரோடு மாநகர், நம்பியூர், சத்தியமங்கலம், கவுந்தப்பாடி, குண்டேரிபள்ளம், கொடிவேரி, அம்மாபேட்டை, வரட்டு பள்ளம் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

ஈரோடு மாநகர பகுதியில் தொடர்ந்து 6 நாட்களாக இரவு நேரம் பரவலாக மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளித்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:- ஈரோடு-20, கோபி -23.20, பவானி - 24.60, நம்பியூர்-13, சத்தியமங்கலம்-15, எலந்தகுட்டை மேடு-18.20, அம்மாபேட்டை-18, கவுந்தப்பாடி-10, கொடிவேரி அணை-10, வரட்டுபள்ளம்-18.80.

Tags:    

Similar News