பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98 அடியாக குறைந்தது
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98.08 அடியாக உள்ளது.
- அணையில் இருந்து 2,650 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.
பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2.47 லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கீழ்பவானி வாய்க்காலுக்கு 2-ம் சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98.08 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 582 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கீழ்பவானி வாய்க்காலுக்கு நேற்று 500 கன அடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இன்று 1,500 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.
இதுபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு ஆயிரம் கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 2,650 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.