உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98 அடியாக குறைந்தது

Published On 2023-02-04 09:32 GMT   |   Update On 2023-02-04 09:32 GMT
  • பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
  • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 98.90 அடியாக குறைந்துள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இந்த நிலையில் அணையில் இருந்து 2-ம் போக புஞ்சை பாசனத்திற்காக கீழ்ப்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் மேலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 98.90 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 733 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கீழ்பவானி வாய்க்காலுக்கு 1,800 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 1000 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் 2,950 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News