உள்ளூர் செய்திகள் (District)

கோப்புப்படம்.

கீழ்பவானி பாசனத்திற்கு மீண்டும் தண்ணீர் திறப்பு

Published On 2023-03-29 10:11 GMT   |   Update On 2023-03-29 10:11 GMT
  • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.97 அடியாக குறைந்து உள்ளது.
  • கீழ்பவானி பாசனத்திற்காக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.

இந்த அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.97 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 812 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கீழ்பவானி பாசனத்திற்காக இன்று முதல் பவானிசாகர் அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேபோல காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 1300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குண்டேரிபள்ளம் அணை பகுதியில் இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததது. இதன் காரணமாக அணை தனது முழு கொள்ளளவான 41.75 அடியை எட்டியது.

இதேபோல் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 25.92 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.95 அடியாக உள்ளது.

Tags:    

Similar News