உள்ளூர் செய்திகள்

ஒரத்துப்பாளையம் அணை நீர்மட்டம் 20 அடியாக உயர்வு

Published On 2022-08-10 09:45 GMT   |   Update On 2022-08-10 09:45 GMT
  • நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் 6 மதகுகளில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
  • அணையின் முன்பு உள்ள தரைப்பாலத்தையும், சொக்கநாதபாளையம் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள நொய்யல் ஆற்றின் தரைப்பாலத்தையும் மூழ்கி தண்ணீர் செல்கிறது.

சென்னிமலை:

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நொய்யல் ஆற்றில் நேற்று முன்தினம் இரவு முதல் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் நேற்று காலை 6 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 1040 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையில் 16 அடி தண்ணீர் தேங்கி இருந்தது.

அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று மாலை 4 மணி அளவில் நீர்மட்டம் 20 அடியாக உயர்ந்தது. அப்போது வினாடிக்கு 2,523 கன அடி நீர்வரத்து இருந்தது. ஒரே நாளில் 4 அடி அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.

அணையில் தேங்கியுள்ள தண்ணீரில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. இதனால் அணை முழுவதும் ஆகாயத்தாமரையின் ஆக்கிரமிப்பில் உள்ளது. நேற்று மாலை அணையில் இருந்து வினாடிக்கு 2,023 கனஅடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் 6 மதகுகளில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் அணையின் முன்பு உள்ள தரைப்பாலத்தையும், சொக்கநாதபாளையம் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள நொய்யல் ஆற்றின் தரைப்பாலத்தையும் மூழ்கி தண்ணீர் செல்கிறது.

இதனால் தரைபாலத்தை பொதுமக்கள் யாரும் கடந்து செல்ல வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால் அணையின் அருகில் உள்ள ஒரத்துப்பாளையம், கொடுமணல், தம்மரெட்டிபாளையம், செம்மங்குழிபாளையம், மறவபாளையம், சொக்கநாதபாளையம், மருதுறை, குருக்கள் பாளையம், நத்தக்காடையூர் உள்பட பல கிராம புறங்களுக்கு இடையே செல்வேர் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News