உள்ளூர் செய்திகள்

கோவையில் கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-07-11 14:52 IST   |   Update On 2023-07-11 14:52:00 IST
  • தனது காதலன் தற்கொலைக்கு முயன்ற தகவல் கிடைத்ததும் யுவஸ்ரீ மிகுந்த மனவேதனை அடைந்தார்.
  • உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கோவை,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் யுவஸ்ரீ (வயது 19).

இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக மாணவி கல்லூரி விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

யுவஸ்ரீக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

தற்போது காதலன் சிங்கப்பூரில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். இதனால் காதலர்கள் செல்போன் மூலமாக பேசி அவர்களது காதலை வளர்த்து வந்தனர்.

நேற்று விடுதியில் இருந்த யுவஸ்ரீ செல்போன் மூலமாக காதலனிடம் பேசினார். அப்போது அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த காதலன் தற்கொலை செய்யப் போவதாக கூறி விட்டு செல்போனை சுவிட்ச்ஆப் செய்து விட்டார். பின்னர் அவர் மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அவரது நண்பர்கள் அவரை மீட்டு அங்கு உள்ள ஆஸ்பத்திரி சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

தனது காதலன் தற்கொலைக்கு முயன்ற தகவல் கிடைத்ததும் யுவஸ்ரீ மிகுந்த மனவேதனை அடைந்தார். பின்னர் அவரும் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி அறையில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து சக மாணவிகள் அதிர்ச்சி யடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து அவர்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் தற்கொலை செய்து கொண்ட யுவஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News