வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பிடிபட்ட பாம்பு.
திண்டுக்கல்லில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அடுத்தடுத்து பிடிபட்ட பாம்புகள்
- பல்வேறு சான்றுகள் வாங்குவதற்கு பொதுமக்கள் வருகை தரும் அலுவலகத்தில் இன்று காலை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் ஒரு சாரைப்பாம்பு புகுந்தது.
- தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணிநேரம் போராடி 4 அடி நீளமுள்ள கொம்பேறிமூக்கன் பாம்பை பிடித்து வெளியே கொண்டு சென்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களுக்கு லைசென்ஸ் எடுக்க, புதுப்பிக்க, பல்வேறு சான்றுகள் வாங்குவதற்கு பொதுமக்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் ஒரு சாரைப்பாம்பு புகுந்தது.
உடனே இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் லாவகமாக சாரைப்பாம்பை பிடித்தனர். இதனை தொடர்ந்து லைசென்ஸ் எடுக்க வந்த ஒரு மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் பாம்பு சுருண்டு கொண்டது. இதனால் அங்கிருந்தவர்கள் அச்சத்துடன் ஓட்டம் பிடிக்க தொடங்கினர். தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணிநேரம் போராடி 4 அடி நீளமுள்ள கொம்பேறிமூக்கன் பாம்பை பிடித்து வெளியே கொண்டு சென்றனர்.
வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ள பகுதி இரவு நேரங்களில் மதுபானம் அருந்தும் இடமாக மாறி காணப்படுகிறது. மேலும் சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகிறது. இங்குள்ள முட்செடிகள் அகற்றப்படாமல் இருப்பதாலும் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு சாரல்மழை பெய்து வருவதாலும் பாம்புகள் படையெடுத்து வந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
எனவே இப்பகுதியை பாதுகாப்பு இடமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.