உள்ளூர் செய்திகள்

ஆவடியில் நடைபாதை மேம்பாலம் இடிப்பு பணி தாமதம்: 4 புறநகர் ரெயில்கள் ரத்தால் பயணிகள் தவிப்பு

Published On 2024-02-18 06:53 GMT   |   Update On 2024-02-18 06:53 GMT
  • ஆவடி ரெயில் நிலையத்தில் இன்று காலையில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
  • ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பஸ்களில் ஏறி பயணம் செய்தனர்.

ஆவடி:

சென்னை ஆவடி ரெயில் நிலையத்தில் பழைய நடைபாதை மேம்பாலம் உள்ளது. இந்த நடை மேம்பாலத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணிகள் நேற்று இரவு நடந்தது. இந்த பணிகள் இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 4.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக சென்னை சென்ட்ரல், திருவள்ளூர், அரக்கோணம் இடையே இரவு நேரத்தில் 10 ரெயில்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆவடி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு நடைபாதை மேம்பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியது. இதையடுத்து நேற்று இரவில் 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

ஆனால் இன்று அதிகாலை 4.30 மணிக்கு முடிய வேண்டிய பணிகளில் திடீரென்று காலதாமதம் ஏற்பட்டது. இதனால் காலை 6.30 மணி வரை பணிகள் நடந்தன. இதையடுத்து இன்று காலை 6.30 மணி வரை ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக காலை நேரத்தில் ரெயில் நிலையங்களுக்கு வந்த பயணிகள் தவித்தனர். குறிப்பாக ஆவடி ரெயில் நிலையத்தில் இன்று காலை யில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

காலை 6.30 மணிக்கு பிறகு அரக்கோணம் மற்றும் திரு வள்ளூரில் இருந்த சென்ட்ர லுக்கு வரும் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் பாதை யில் இயக்கப்பட்டதால் பட்டாபிராமில் இருந்து பட்டரவாக்கம் வரை இடை யில் உள்ள எந்த ரெயில் நிலையங்களிலும் ரெயில்கள் நிறுத்தப்படவில்லை.

இதன் காரணமாக இந்த ரெயில் நிலையங்களில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த மார்க்கத்தில் வந்த ரெயில்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்குள் வர அனுமதிக்கப்பட்டன. இதனால் சென்ட்ரலில் இருந்து திரு வள்ளூர் மார்க்கத்தில் இன்று காலையில் செல்லும் 4 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சென்ட்ரலில் இருந்து இன்று அதிகாலை 5.20 மணிக்கு நெல்லூர் செல்லும் ரெயில், 5.40 மணிக்கு திருவள்ளூர் செல்லும் ரெயில், 6.15 மற்றும் 6.20 மணிக்கு பட்டாபிராம் செல்லும் ரெயில்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும் இன்று காலையில் பயணிகள் தவித்தனர்.

ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பஸ்களில் ஏறி பயணம் செய்தனர். அதன் பிறகு ரெயில் போக்குவரத்து தொடங்கினாலும் பயணிகள் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது. காலை 8 மணிக்கு பிறகு நிலைமை சீரடைந்தது. இதற்கிடையே ஆவடி ரெயில் நிலையத்தில் நடை பாதை மேம்பாலத்தை இடித்து அப்புறப்படுத்துவதில் மீதமுள்ள பணிகள் இன்று இரவு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News