உள்ளூர் செய்திகள்

பரமக்குடியில் கட்டிட தொழிலாளி கொலை- வாலிபர் கைது

Published On 2023-05-01 05:25 GMT   |   Update On 2023-05-01 05:25 GMT
  • ஜீவா நகரில் உள்ள பெட்டிக்கடை முன்பு கனகராஜ் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
  • நண்பர்கள் கனகராஜூடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பரமக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் பட்டேல் தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது35). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று இரவு ஜீவா நகரில் உள்ள பெட்டிக்கடை முன்பு கனகராஜ் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த பர்மா காலனியை சேர்ந்த துரைமுருகன் (22) மற்றும் அவரது நண்பர்கள் கனகராஜூடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இந்த மோதலில் துரைமுருகன் ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கனகராஜுவை சரமாரியாக குத்திவிட்டு தப்பினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கனகராஜ் பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த எமனேசுவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து துரைமுருகனை கைது செய்தனர்.

பரமக்குடியில் நடந்த இந்த கொலை சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News